இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 நவம்பர், 2014

தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட சொற்கள்


இஸ்லாம் என்ற உலகளாவிய வாழ்வியல் கொள்கை பலராலும் தவறாகப்புரிந்து கொள்ளப்படுவதற்கு இதுவும் காரணமே...  திருக்குர்ஆனிலும்  முஸ்லிம்களின் இடையேயும் புழங்கும் சில அரபு மொழிப் பதங்கள் முஸ்லிம் அல்லாதவர்களால் – ஏன் பல முஸ்லிம்களாலும் கூட -  தவறாக பொருள் கொள்ளப் படுகின்றன. முதலில் இவற்றைத் தெளிவுபடுத்துவோம்.
அல்லாஹ் என்றால் யார்?
இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனைத்  திருக்குர்ஆன் அரபுமொழிச் சொல்லான அல்லாஹ் என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. ஆங்கிலத்தில் காட், தமிழில் கடவுள், ஹிந்தியில் பகவான் என்றெல்லாம் குறிப்பிடப்படுவது போல் அரபு மொழியில் கடவுளைக் குறிக்கும் வார்த்தைதான் அல்லாஹ்! எனினும் மற்ற மொழி வார்த்தைகளோடு ஒப்பிடும் போது இவ்வார்த்தைக்கு ஓரிரு தனிச் சிறப்புக்கள் உள்ளன:
  இவ்வார்தையின் உண்மைப்பொருள் வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்பது.
 இவ்வார்த்தைக்கு ஆண்பால் பெண்பாலும் கிடையாது, பன்மையும் கிடையாது. எப்போதும் இது ஒருமையிலேயே விளங்கும்.
 உதாரணமாக ஆங்கில வார்த்தை God – Gods , Godess  அல்லது கடவுள் கடவுளர்கள் என்றும் பகவான் பகவதி என்றும் பன்மைக்கும் பாலுக்கும் ஏற்றவாறு மாறுவதுபோல் அல்லாஹ் என்ற வார்த்தை ஒருபோதும் சிதைவதில்லை.
இப்படிப்பட்ட சிறப்புக்களின் காரணத்தால் உலகெங்கும் முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்ற வார்த்தை கொண்டு அழைக்கின்றனர். மாறாக அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுள் என்றோ முஸ்லிம்களின் குலதெய்வம் என்றோ நினைத்து விடாதீர்கள்.
இஸ்லாம்  மற்றும் முஸ்லிம்
 . இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து அவன் கற்றுத்தரும் நல்லொழுக்கத்தைப் பேணி வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்  
   முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் அல்லது கீழ்படிபவள் என்று பொருள். இறைவன் தன் வேதங்கள் மூலமாகவும் தூதர்கள் மூலமாகவும் கற்றுத் தரும் நல்லொழுக்க நெறிகளை யார் வாழ்வில் பின்பற்றி நடக்கின்றார்களோ அவர்களே முஸ்லிம்கள் எனப்படுவர்.. ஒரு தொப்பியோ தாடியோ வைப்பதனாலோ அல்லது அரபியிலோ உருது மொழியிலோ பெயர் வைப்பதனாலோ யாரும் முஸ்லிம் ஆகி விட முடியாது. ஒரு முஸ்லிம் தாய் தந்தையருக்குப் பிறந்து விட்டாலும் ஒருவர் முஸ்லிம் ஆக முடியாது. முழுக்க முழுக்க ஒழுக்கத்தை பின்பற்றுதல் மூலமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.

ஆக, இந்த அடிப்படையில்  இறைவனுக்குக் கீழ்படியும் பண்பு யாரிடம் எல்லாம் இருக்கிறதோ, அவர்கள் எந்த மதத்தில் பிறந்திருந்தாலும் சரி, எம்மொழியில் பேசினாலும் சரி, உலகின் எந்த மூலையில் பிறந்திருந்தாலும் சரி.......  மட்டுமல்ல அவர்கள் எக்காலத்தில் வாழ்ந்திருந்தாலும் சரி, அனைவரும் முஸ்லிம்களே! இதுதான் எமக்கு இஸ்லாம் கற்றுத்தரும் பரந்த கண்ணோட்டமாகும்.

பாவம் மற்றும் புண்ணியம்


இவை நமது மொழிவழக்கில் உள்ள வார்த்தைகளேயானாலும் இவற்றையும் பெரும்பாலான மக்கள் தவறாகவே புரிந்து வைத்துள்ளனர். ஒரு சிலர் பெற்றோர்கள் அல்லது முன்னோர்கள் எதை செய்யக் கூடாது என்று கற்பித்தார்களோ  அதையே பாவம் என்று கருதுகின்றனர். சிலர் நாட்டு மக்கள் அல்லது பெரும்பான்மை எதை தீமை என்று தீர்மானிக்கிறார்களோ அதையே பாவம் என்று கருதுகின்றனர். இன்னும் சிலர் தங்களது மனோ இச்சை எதை தீமை என்று  சொல்கிறதோ அதையே பாவம் என்பர். இவ்வாறே புண்ணியத்தையும் தீர்மானிக்கின்றனர். ஆனால் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த உலகத்துக்கு உரிமையாளனும் பரிபாலகனும் ஆன இறைவன் அவனுக்கு மட்டுமே பாவம் எது புண்ணியம் எது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது என்பதே. அவனே அனைத்துப் படைப்பினங்களின் நுணுக்கங்களையும் தேவைகளையும் முழுமையாக அறிந்தவனும் அவை ஒவ்வொன்றினதும் உரிமைகளை பங்கிடக் கூடியவனும் அவனே. எல்லாவற்றையும் விட முக்கியமாக மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளன்று நமது வினைகளை விசாரித்து தீர்ப்பு வழங்க உள்ளவனும் அவனே. எனவே இறைவன் எதை செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே பாவம்! எதை நம்மை செய் என்று ஏவுகிறானோ அதுவே அதுவே புண்ணியம்!

வியாழன், 20 நவம்பர், 2014

பாமரனுக்கும் பணிந்து வாழ்ந்த மாமன்னர்

‘பதவி வரும்போது பணிவு வர வேண்டும்’ என்று பாடியவர்கள் உட்பட பலராலும் அதை நடைமுறைக்கு கொண்டுவர முடிவதில்லை என்பதை நாம் கண்டு வருகிறோம். பதவி என்பது இறைவனால் தன் மீது சுமத்தப் படும் அமானிதம் என்பதை உணர்ந்தவர்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. தங்கள் மீது சுமத்தப்பட்ட பொறுப்பைப் பற்றி இறைவனால் மறுமை நாளில் கேள்வி கேட்கப் படுவோம் என்ற உணர்வு அந்த ஆட்சியாளர்களை கர்வம் கொள்வதில் இருந்தும் அகங்காரம் கொள்வதில் இருந்தும் தடுத்துவிடும்
நபிகள் நாயகம் மதீனா நகரில் ஆட்சித் தலைவராக இருந்த காலத்தில் நடந்தவை சில சம்பவங்களைப் பாருங்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹுனைன் எனும் போர்க்களத்திலிருந்து மக்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நானும் இருந்தேன். நபிகள் நாயகத்தை அறிந்து கொண்ட மக்கள் (அவர்கள் மன்னராக இருந்ததால்) அவர்களிடம் தமது தேவைகளைக் கேட்கலானார்கள். கூட்டம் நெருக்கித் தள்ளியதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முள் மரத்தில் சாய்ந்தார்கள். அவர்களின் மேலாடை முள்ளில் சிக்கிக் கொண்டது. 'எனது மேலாடையை எடுத்துத் தாருங்கள்' என்று கூறினார்கள். 'இம்மரங்களின் எண்ணிக்கையளவு என்னிடம் ஒட்டகங்கள் இருந்தால் அவை அனைத்தையும் உங்களுக்கு நான் பங்கிட்டிருப்பேன். என்னைக் கஞ்சனாக நீங்கள் காண மாட்டீர்கள்' எனவும் கூறினார்கள்.
நூல் : புகாரி 2821, 3148
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போரில் பங்கெடுத்து விட்டு படை வீரர்களுடன் வருகிறார்கள். மாமன்னர் வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டு மக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் அவர்களை வழிமறிக்கிறார்கள். மன்னர்களுக்கு முன்னால் கைகட்டிக் குனிந்து மண்டியிடுவது தான் அன்றைய உலகில் வழக்கமாக இருந்தது. மன்னரிடம் நேரில் பேசுவதோ, கோரிக்கை வைப்பதோ கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

உலகத்தின் மன்னர்களெல்லாம் இத்தகைய மரியாதையைப் பெற்று வந்த காலத்தில் தான் சர்வ சாதாரணமாக நபிகள் நாயகத்தை மக்கள் நெருங்குகிறார்கள். எந்தப் பாதுகாப்பு வளையமும் இல்லாததால் நெருக்கித் தள்ளப்படுகிறார்கள். அந்த நேரத்தில் இம்மாமனிதருக்கு கோபமே வரவில்லை. மன்னருடன் இப்படித் தான் நடப்பதா என்று சலிப்பு அடையவும் இல்லை. அவரது படை வீரர்களும் தத்தமது வேலைகளைப் பார்த்தார்களே தவிர நபிகள் நாயகத்தை நெருக்கித் தள்ளியவர்கள் மீது பலப் பிரயோகம் செய்யவில்லை. போர்வையைத் தான் சட்டைக்குப் பதிலாக மேலாடையாக நபிகள் நாயகம் அணிந்திருந்தனர். அந்த ஆடையும் முள்ளில் சிக்கி உடன் மேற்பகுதியில் ஆடையில்லாமல் நிற்கும் நிலை ஏற்பட்டது. அப்போதும் அம்மக்கள் மீது இம்மாமனிதருக்கு எந்த வெறுப்பும் ஏற்படவில்லை.
'என்னை முள்மரத்தில் தள்ளி விட்ட உங்களுக்கு எதுவுமே தர முடியாது' என்று கூறவில்லை. மாறாக 'இம்மரங்களின் எண்ணிக்கை யளவுக்கு ஒட்டகங்கள் இருந்தாலும் அவற்றையும் வாரி வழங்கு வேன்' என்று கூறுவதிருந்து புகழையும், மரியாதையையும் அவர்கள் இயல்பிலேயே விரும்பவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

= ஒரு மனிதர் உடல் நடுங்கிட நபி(ஸல்) அவர்களிடம் வந்தார், ‘சாதரணமாக இருப்பீராகஉலர்ந்த இறைச்சியை சாப்பிட்டு வந்த குறைஷி குலத்து பெண்ணுடைய மகன் தான் நான்என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்கு கொண்டு வந்தார்கள். (ஆதாரம்: இப்னுமாஜா 3303)

அன்றைய காலத்தில் மன்னர்களிடம் மக்கள் அப்படிதான் நடுங்கிட வருவார்கள், அப்படி தான் வரவேண்டும் என்ற நிலையிருந்த காலகட்டத்தில் ஆண்டிக்கும், அரசனுக்கும் முன்மாதிரியான நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு அழகாக நடந்து கொண்டார்கள் என்பதை பார்த்தீர்களா?

ஒருநாள் அன்பளிப்பு வந்த ஆட்டை சமைத்து, தானும் மக்களும் சாப்பிட அமர்ந்தார்கள். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். இதனைக் கண்ட ஒரு கிராமவாசி என்ன இப்படி உட்கார்ந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைவன் என்னை அடக்குமுறை செய்பவனாகவும், மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்.என்று விடையளித்தார்கள்.

சாதாரண மனிதன்கூட சகித்துக் கொள்ளாத எத்தனையோ விஷயங்களை மாபெரும் வல்லரசின் அதிபராக இருந்தும் அவர்கள் சகித்துக்கொண்டு நடந்து கொண்ட முறை நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. உத்தரவுகளை பிறப்பித்து விட்டு ஒய்யாரத்தில் அமர்ந்து கொள்ளவில்லை. மாறாக மக்களோடு மக்களாக சேர்ந்து பணிகளையும், சிரமங்களையும் பகிர்ந்துக் கொண்டார்கள்.

= அகழ் யுத்தத்தின் போது நபி(ஸல்) அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள், மண் சுமந்தார்கள்.ஆதாரம்: புகாரி 2837, 3034.
= நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன், பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள். ஆதாரம்: புகாரி 3906

= மக்களோடு மக்களாக முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் இருப்பதால் உள்ள சிரமத்தைக் கண்ட அப்பாஸ்(ரலி) அவர்கள் மக்களிடம் கலந்து பேசி ஒரு கூடாரத்தை தனியாக உங்களுக்கு அமைத்து தருகிறோம்என்று கேட்டதற்கு நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் மக்கள் என் மேலாடையை பிடித்து இழுத்த நிலையிலும், எனது பின்னங்காளை மிதித்த நிலையிலும் அவர்களுடன் நான் கலந்து வாழவே நான் விரும்புகிறேன். அவர்களிடம் இருந்து இறைவன் என்னைப் பிரிக்கும் வரை (மரணிக்கும் வரை) இப்படித்தான் இருப்பேன்என்று கூறினார்கள். (ஆதாரம்: பஸ்ஸார் 1293)


இப்படி ஏராளமான சம்பவங்களின் மூலம் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாகவே வாழ்ந்துள்ளார்கள் என்பது தெரிகிறது. 

திங்கள், 17 நவம்பர், 2014

இறைவன் ஏன் பரீட்சிக்க வேண்டும்?

 'இறைவன்  இவ்வுலக வாழ்வை ஒரு பரீட்சைக்களமாக அமைத்திருக்கிறான்.  இந்தப் பரீட்சையில் யார் அவனுக்குக் கீழ்படிந்து தங்கள் ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்தி வாழ்கின்றார்களோ அவர்களுக்குப் பரிசாக சொர்க்கத்தை அவன் வழங்க உள்ளான்.  யார் கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்கின்றார்களோ அவர்களுக்கு நரகத்தை தண்டனையாக வழங்கவுள்ளான்.' என்றெல்லாம் இறைத்தூதர்களும் இறைவேதங்களும் போதிப்பதை அறிவோம். இதை கேள்விப்படும்போது கீழ்கண்ட சந்தேகங்கள் மனிதர்களிடம் எழுவது இயல்பு:

நாமே சற்று சிந்தித்தால் இக்கேள்விகளுக்கான விடைகள் நாமே பெறலாம்.

கேள்வி:  இறைவன் ஏன் பரீட்சிக்க வேண்டும்? அவன்தான் அனைத்தையும் அறிபவனாயிற்றே... - குறிப்பாக முக்காலத்தையும் - அறியக்கூடிய அவன்  நேரடியாகவே இன்ன மனிதன் பரீட்சையில் ஜெயிப்பானா அல்லது தோற்பானா என்பதை முன்கூட்டியே அறிய முடியுமே.... அந்த அடிப்படையில் அந்த மனிதனை சொர்கத்திலோ அல்லது நரகத்திலோ போடலாமே?
பதில்: அதற்கு இறைவனுக்கு எந்த அடிப்படையும் தேவை இல்லை. அவன் விரும்பியதை செய்துகொள்ள யார் தயவும் தேவைப்படாதவன். அவன் அப்படி உங்களை சொர்க்கத்திலோ நரகத்திலோ போட்டாலும் நீங்கள் திருப்பிக் கேட்கவும்  முடியாது என்பதே உண்மை. உதாரணமாக உங்களை அப்படி நரகத்தில் நேரடியாகப் போட்டால் என்ன செய்வீர்கள்? எதற்காக என்னை தண்டிக்கிறாய்? நான் என்ன செய்தேன் என்று கேட்பீர்களா இல்லையா?

கேள்வி: சரி, எதற்கு நரகம்? நாம் கஷ்டப்படுவதைப் பார்த்து ரசிப்பது அவன் விருப்பமா
பதில்: அப்படிப்பட்டவனாக இருந்தால் அவன் அனைவரையும் நேரடியாக  நரகத்துக்கு அனுப்பி இருப்பானே? அப்போதும் அவனை யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது.

கேள்வி: சரி, நேரடியாக சொர்க்கத்தில் போட்டால் இறைவனுக்கு என்ன நஷ்டம்?
பதில்: அவன் நம்மை நரகத்தில் போட்டாலும் சொர்க்கத்தில் போட்டாலும் அவனைத் திருப்பிக் கேட்க முடியாது. நமக்கு விளக்கம் சொல்லிகொண்டிருக்க வேண்டிய அவசியமும் அவனுக்குக் கிடையாது.
ஆனால் இறைவன் மிகக் கருணையாளன். நம்மை- அதாவது முதல் மனிதரையும் அவரது மனைவியையும் - படைத்ததன் பின்னர் அவர்களை சொர்க்கத்தில்தான் குடியமர்த்தினான் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். பைபிளும் குர்ஆனும் அவ்வாறுதான் சொல்கின்றன. ஆனால் சொர்க்கத்தின் அருமையை அதன் விலைமதிப்பை உணராத அவர்கள் சில தவறுகளை செய்தார்கள். அதன் காரணமாக இறைவன் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினான்.
 இங்கு முக்கியமாக கவனிக்கவேண்டிய விடயம் இதுதான்...

பசித்தவனுக்குத்தான் உணவின் அருமையும் தாகம் உள்ளவனுக்குத்தான் நீரின் அருமையும் தெரியும். வெயிலில் சென்று வந்தவனுக்குத் தான் நிழலின் அருமை தெரியும். எனவே சொர்க்கத்தை இலவசமாகக் கொடுக்காமல் அதை சிறிது கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பொருளாக அவன் ஆக்கிவிட்டான்.
 சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நமது ஆதி தந்தையும் தாயும் நாம் இன்று வாழும் பூமிக்கு அனுப்பப் பட்டார்கள். இந்த நிகழ்வு பற்றி திருக்குர்ஆனில் இறைவன் கூறுவதை சுருக்கமாகக் காண்போம்:
 சொர்க்கத்தில் இறைவன் புசிக்க வேண்டாம் என்று தடுத்த கனியை ஷைத்தானின் தூண்டுதலால் புசித்த பின் தாங்கள் செய்த தவறை உணர்ந்தார்கள் நமது ஆதி தந்தையும் தாயும். பிறகு இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரினர். இறுதி இறைவேதம் திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
2:37. (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
 7:24-25 '(இங்கிருந்து) இறங்கி விடுங்கள்! உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவர்களாவீர். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும், வசதியும் உள்ளன' என்று கூறினான். 'அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள்' என்றும் கூறினான்.
2:38. 'இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்' என்று கூறினோம்.
2:39. '(நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் தாம் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்' (என்றும் கூறினோம்.)
 இதுதான் நாம் பூமிக்கு வந்ததன் சுருக்கமான வரலாறு!
 ஸ்ரீ  இங்கு நேர்வழி என்பது இறைவனின் தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் நமக்கு வருகிறது. இந்த பரீட்சைக்களத்தில் வெறும் நேர்வழி  மட்டும்   இருந்து  அதற்கு  எதிரான  ஒன்று இல்லாவிட்டால் அந்தப் பரீட்சையில் அர்த்தம் இருக்காது. அதனால்தான் ஷைத்தான் என்ற ஒரு தீய சக்திக்கு இறைவன் அனுமதி கொடுத்து அவனுக்கு சில ஆற்றல்களையும் வழங்கி மனிதனை வழிகெடுக்க அனுமதியும் கொடுத்துள்ளான். யார் அவனைப் பின்பற்றுகிறார்களோ அவன் தூண்டும் சஞ்சலங்களுக்கு இரையாகின்றார்களோ அவர்கள் இந்தப் பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். மறுமையில் நரகத்தை அடைகிறார்கள்.
  ஆக, இந்த பரீட்சைக் களத்தில் ஒவ்வொருவருக்கும் அவரவர் பரீட்சையை முடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட கெடு நிச்சயிக்கப் பட்டுள்ளது. அநீதி, அக்கிரமங்கள் நடப்பதற்கும் இதுதான் இடம். அவற்றை எதிர்த்துப் போராட வாய்ப்பளிப்பதற்கும் இதுதான் இடம்! இங்கு இறைவன் அதர்மத்தை சிலவேளைகளில் நல்லோர்களின் கரங்கள் கொண்டு அழிக்கிறான். சிலவேளைகளில் தனது தண்டனைகளான இயற்கை சீற்றங்களைக் கொண்டு அழிக்கிறான். எதை எப்போது எப்படி அழிப்பது என்பது அவன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.

  மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 16:61)