இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 மார்ச், 2019

இறையச்சம் கற்பழிப்பைத் தடுக்குமா?


Related image
பெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி,  குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நடக்கும் விபச்சாரமும் சரி - சூழ்நிலைகள் முழுமையாக சாதகமானதாக இருக்கும்போது இக்குற்றத்தில் ஈடுபடுவோரைத் தடுப்பது என்பது அசாத்தியமான செயலே!.
நாளொன்றுக்கு நம் நாட்டில் சராசரி  600 பெண்கள் கற்பழிப்புக்கு ஆளாகிறார்கள் என்பது வேதனைக்குரிய உண்மை! கற்பழிப்பு என்பது நடவாமல் தடுப்பதற்கு தீர்வைக் கூற முற்பட்ட சிலர் தன்னைக் கற்பழிக்க முற்படும் ஆணிடம் அண்ணன்- தங்கை உறவை நினைவூட்டி கற்பழிப்பைத் தடுக்க முயற்சிக்கலாம் என்றும் கூறினார்கள். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் வெளியான வீடியோ துணுக்குகளில் கூட பாதிக்கப் பட்ட பெண், “அண்ணா அடிக்காதீங்கண்ணா, நானே கழட்டறேன்...” என்றுதான் கூறிக் கதறுகிறார். ஆனால் அது அவளைக் காப்பாற்ற வில்லை என்றே அறிகிறோம்.
குற்றவாளியிடம் திடீர் மனமாற்றத்தை உண்டாக்க எதுவுமே சக்தியுள்ளவை அல்ல என்பதை அறிகிறோம். 

மனமாற்றத்தை உண்டாக்கவல்ல ஒரு வழி 
கற்பழிக்கும் வக்கிரத்தோடு உள்ள ஒருவனை அதிலிருந்து தடுக்க  அவனுக்கு அதிர்ச்சியூட்டக்கூடிய மனமாற்றம் ஏதேனும் நிகழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம். இறையச்சத்திற்கு மட்டுமே அந்த அதிர்ச்சி வைத்தியத்தை நிகழ்த்தும் ஆற்றல் உள்ளது என்பதைக் கீழ்கண்ட சம்பவங்கள் உணர்த்துகின்றன.
‘இறைவன் என்னைக் கண்காணிக்கிறான், அவனிடம் எனது நடவடிக்கைகள் பதிவாகின்றன, என் குற்றத்திற்காக இறைவனால் தண்டிக்கப்படுவேன்’ என்ற பொறுப்புர்ணர்வுக்கே இறையச்சம் என்று கூறப்படும். இந்த உணர்வு  குற்றவாளிக்கு மேலிட்டால் மட்டுமே அவன் குற்றத்திலிருந்து விலக வாய்ப்புள்ளது.

அவ்வாறு நடந்த சம்பவங்களில் சில கீழே: 

குகையில் சிக்கிக்கொண்ட மூவர்
நபிகளாருக்கு முன் வாழ்ந்த சமூகத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நபிகளார் விவரித்தார்கள். அதன் ஒரு பகுதி இது:

= மூன்று மனிதர்கள் மழைக்காக ஒரு குகையில் தஞ்சம் புகுந்தபோது அந்த குகை வாசலுக்கு முன் ஒரு பெரிய பாறாங்கல் வந்து விழுந்து அடைத்துக் கொண்டது. அதனால் மூவரும் குகையிலிருந்து வெளியேற முடியாத சூழல் உண்டானது. அப்போது அவர்களில் ஒருவர் கூறினார்: ‘நாம் ஒவ்வொருவரும் கடந்த காலத்தில் செய்த நற்செயல் ஒன்றை சொல்லி இறைவனிடம் பிரார்த்திப்போம். அதனால் இறைவன் இந்தப் பாறையை அகற்றி நம்மை விடுதலை செய்யக்கூடும்’ என்றார். அப்போது அவர்களில் ஒருவர் கூறியதைப் பாருங்கள்:

“இறைவா! எனக்குச் சிறிய தந்தையின் மகள் இருந்தாள். அவள் எனக்கு மிகப் பிரியமானவளாக இருந்தாள். அவளை தவறாக பயன்படுத்த நான் விரும்பினேன். என் விருப்பத்திற்கு இணங்க மறுத்தவளாக என்னிடமிருந்து விலகி விட்டாள். பிறகு பஞ்சம் ஏற்பட்ட ஆண்டுகளில் ஒரு ஆண்டின் போது அவள் என்னிடம் உதவி கேட்டு வந்தாள். நிபந்தனையின் பேரில் அவளிடம் நூற்றி இருபது தீனார்களைக் கொடுத்தேன். அவளும் சம்மதித்தாள். அவளை நான் நெருங்கினேன். அப்போது அவள், “அல்லாஹ்வை அஞ்சுவீராக! உரிமையின்றி முத்திரையை நீக்கிவிடாதீர்” என்று கூறினாள். அவள் எனக்கு. மற்றவர்களை விட மிகப் பிரியமானவளாக இருந்தும், நான் அவளை விட்டும் தவறு செய்யாமல் நீங்கிவிட்டேன். அவளுக்கு நான் கொடுத்த தங்கக் காசுகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை. இறைவா! உன் திருப்தியை நாடி இதை நான் செய்திருந்தால், இந்தச் சிரமத்தை எங்களை விட்டும் நீக்குவாயாக!” என்று அவர் பிரார்த்தித்தார். அவர்களால் வெளியே வர இயலாத அளவுக்கு பாறை இன்னும் சற்று விலகியது. வெளி காற்றும் உள்ளே வந்தது (நூல்: புகாரி)

மேற்படி நிகழ்வில் கற்பழிக்கப் பட இருந்த பெண் இறைவனை நினைவூட்டி தன்னைத் தற்காத்துக்கொண்டதை நாம் அறியமுடிகிறது.

காமுகனிடம் இருந்து தற்காத்துக் கொண்ட சவுதி சிறுமி

சில வருடங்களுக்கு முன் சவுதி அராபியாவில் நடந்த நிகழ்வு இது. அன்று சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்பட்டது. சவுதி சிறுமி ஒருத்தியை ஒரு இளைஞன் காரில் ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்றான். அவளை ஒரு பூட்டப்பட்ட வீட்டிற்குள் வைத்துக் கொண்டு கற்பழிக்க முயன்றான். அப்போது திருக்குர்ஆனை நன்கு மனனம் செய்திருந்த அந்த சிறுமி இடைவிடாது திருக்குர்ஆன் வசனங்களை ஓத ஆரம்பித்தாள். பலமுறை அவளை அணுக நினைத்தும் அவனால் மேற்கொண்டு அவளைத் தொடக்கூட முடியவில்லை. இறுதியில் அவளை எங்கிருந்து கடத்தினானோ அதே இடத்துக்குக் கொண்டுவந்து விட்டுச் சென்றான்.

மகளிருக்கு அன்னை மரியாளிடம் இருந்து ஒரு பாடம்
இது மேற்கண்ட சம்பவங்களைப் போல கற்பழிப்பு சம்பவம் அல்ல. ஆனாலும் கற்பழிப்புக்கு ஆளாகக் கூடிய நிலையில் பெண்கள் இந்த வழிமுறையை ஆத்மார்த்தமான பிரார்த்தனையோடு கையாளலாம். இறைவன் நாடினால் பலன் கிடைக்கும். .
இயேசுவைக் கருத்தரிப்பதற்கு முன் நடந்த சம்பவங்களை வல்ல இறைவன் தனது இறுதிமறையில் கூறுவதைப் பாருங்கள்:
= இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார். அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார். (திருக்குர்ஆன் 19: 16-17)
(ரூஹ் – பரிசுத்த ஆவி – ஜிப்ரீல் அல்லது காப்ரியல் என்ற வானவர்)

வந்தவர் வானவர் என்று அறியாததால் கற்புக்கரசியாகத் திகழ்ந்த மரியாளுக்கு அது ஓர் அதிர்ச்சி தரும் சம்பவமாக இருந்தது. அந்த அதிர்ச்சியில் இறைவனிடமே புகலிடம் தேடுகிறார்.

=''நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று (மர்யம்) கூறினார். (திருக்குர்ஆன் 19:18)
இப்படிப்பட்ட எதிர்பாராத ஆபத்துகள் அல்லது பயமூட்டும் நிகழ்வுகள் நம் வாழ்விலும் வரலாம். தற்காப்புக்காக மரியாள் கையாளும் உத்தி இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயமாகும். தன்னந்தனிமையில் தன் எதிரே நிற்கும் ஆடவனுக்கு இறைவனைப் பற்றி நினைவூட்டி இறைவனிடமே தனக்கு
ப் பாதுகாப்பும் தேடுகிறார். அந்த வல்லோனை மீறி என்னதான் சம்பவித்து விடமுடியும்?
================= 
இஸ்லாம் என்றால் என்ன?
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?

செவ்வாய், 19 மார்ச், 2019

இருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்!



தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம்    
= பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த சபரிராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சமூக வலைதளங்கள் மூலம் அன்னியப் பெண்களோடு நட்பை ஏற்படுத்தி அதைத் தொடர்ந்து அன்னியோன்யமான தகவல் பரிமாற்றம் மூலம் நேரடி தொடர்புக்கு வழி செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களோடு உல்லாசமாக இருக்கும் நிகழ்வுகளை இரகசியமாக செல்போன் மூலம் வீடியோக்களை எடுத்துள்ளனர். இவற்றைக்கொண்டு இவர்களது காம வலையில் விழ்ந்த பெண்களை பிளேக்மெயில் செய்துள்ளனர். இப்பெண்களை வைத்துக்கொண்டு விபச்சாரத்தை வியாபாரமாக செய்துள்ளனர். பெரும்புள்ளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இவர்களைத் தாரைவார்த்துக் கொடுத்து வந்துள்ளனர். சுமார் ஏழு வருடங்களாக இக்கொடூரக் குற்றம் நடந்து வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 26 ம் தேதி இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரைத் தொடர்ந்து இது அம்பலத்திற்கு வந்துள்ளது. கூட்டு பாலியல் வன்முறை மற்றும் அது பற்றிய வீடியோ பகிர்வால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ணிக்கை கிட்டத்தட்ட 200 க்கு மேல் உள்ளதாக செய்திகள் வருகின்றன.
இன்று பெரும் அதிர்வலைகளை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் ஏதோ அபூர்வமான ஒன்றல்ல என்பதை அறிவோம். எப்போதும் போல இந்த சம்பவமும் மற்ற சம்பவங்கள் போல கடந்து போகும்.
இதோ எடுத்துக்காட்டாக கடந்தகால சம்பவங்களில் மிகச்சில...
= டெல்லியில், கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந்தேதி நள்ளிரவு, நிர்பயா (கற்பனை பெயர்) என்ற மருத்துவ மாணவி, 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டார். கடுமையாக தாக்கப்பட்டு, சாலையில் வீசப்பட்ட அவர், சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி, டிசம்பர் 29–ந்தேதி உயிரிழந்தார்.
= காஷ்மீரில் கடந்த வருடம் ஜனவரி 10-ம் தேதி கதுவா மாவட்டத்தில் ஒரு வழிபாட்டுத்தலத்தின் கருவறையில்  8 வயது முஸ்லிம் ஒரு பழங்குடியின சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். 7 நாட்களுக்குப் பின் 17-ம் தேதி சடலமாக அப்பகுதியில் மீட்கப்பட்டார். இது தொடர்பாக 3 போலீஸார் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
= சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்த பெண்ணை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்து அவர் வைத்திருந்த பணம் ரூ.30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
= காடையாம்பட்டி தாலுகாவில் 17 வயது சிறுமியை அவரின் உறவினரே பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி படுகொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
= சூரத்தில் பெஸ்டன் பகுதியில் உள்ள ஒரு கிரிகெட் மைதானத்துக்கு அருகில், உடலில் 86 காயங்களுடன் 9 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 5 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த பிரேத பரிசோதனையில் அந்தச் சிறுமி, குறைந்தது 8 நாள்கள் பாலியல் வன்கொடுமை மூலம் சித்திரவதை செய்யப்பட்டு, நீண்ட நேரம் உயிருக்குப் போராடி பின் இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
= அரூர் கோட்டப்பட்டியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த அண்ணாமலை – மலர் தம்பதியினரின் மகள் சவுமியா. அரசு மேல்நிலைப் பள்ளி யில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.. தீபாவளி விடுமுறைக்கு வீடு வந்த செல்வி சவுமியா காலைக் கடன் கழிக்க ஊருக்கு வெளியே சென்றபோது கடந்த 6 ஆம் தேதி ரமேஷ், சதீஷ் என்ற இரண்டு பேர் அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தியுள்ளனர். தன்னை காத்துக் கொள்ள சவுமியா போராடினார். ஆனால், அந்தக் கயவர்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். உடம்பெல்லாம் காயங்கள், ரத்தமாக வழிந்த நிலையில் பெற்றோரிடம் சவுமியா முறையிட, செய்வதறியாது தவித்த அவர்களும், கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
= சேலம் ஆத்தூர் அருகே தளவாய்ப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு படித்து வந்த ராஜலட்சுமி என்ற சிறுமியிடம், அதே பகுதியில் வசித்து வந்த தினேஷ் குமார் என்பவன் பாலியல் சீண்டல்களை செய்துள்ளான். இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி மிரட்டியே அடுத்தடுத்த வன்மத்தை அரங்கேற்றி வந்துள்ளான். தன்னால் ஒரு கட்டத்துக்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாத சிறுமி, இதை தன் பெற்றோரிடம் சொல்ல, இதனை அடுத்து அவர்கள் தினேஷைக் கண்டித்துள்ளனர்.
=  பதயூன் மாவட்டம் பிஸ்ஸாவுலி தொகுதி எம்எல்ஏ குஷாகரா சாகர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். வேலைகாரரின் மகளை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் கூறியுள்ளார். போலீசில் புகார் தெரிவித்ததால் கொலை செய்வதாக மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை முடித்துகொள் ரூ. 20 லட்சம் தருவதாக பேரம் பேசியதாகவும் கூறியுள்ளார். எம்எல்ஏவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதால் அப்பெண் இப்புகாரை போலீசில் தெரிவித்துள்ளார்.
= திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் மாணவிக்கு உதவி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து விடுதி காப்பாளர்களும் அந்த செயலுக்கு ஒத்துழைப்பு தருமாறு மாணவியை வற்புறுத்திய  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
= உத்தரபிரதேச மாநிலம் உன்னா வில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் சிறுமியை பலாத்காரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
= சேலம் மாவட்டத்தில், எடப்பாடி தொகுதி ஜலகண்டாபுரம் தோரமங்கலம் பகுதியில் கடந்த மாதம் எட்டு வயது மற்றும் ஏழு வயதுடைய இரு குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மேலும், இதே பகுதியில் மற்றொரு 7 வயது குழந்தை பாலியல் தொந்தரவிற்கு உள்ளாக்கப்பட்டதுடன், அக்குழந்தையின் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
= சமீபத்தில் #MeToo பாலியல் புகார்களின் வாயிலாக கடந்த காலத்தில் பிரபலங்கள் தங்களுக்கு இழைத்த பாலியல் கொடுமைகளை நடிகைகளும் பெண் கலைஞர்களும் சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து விவாதித்ததை அறிவோம். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறினார் பாடகி சின்மயி, மட்டுமல்ல நடிகர்கள் கல்யாண் மற்றும் ஜான் விஜய் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளையும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
= ஒரு இலங்கைப் பெண் கூறியிருப்பதாவது: நான் இப்போது கொழும்பில் வசிக்கிறேன். எனக்கு நடனம் பிடிக்கும். தமிழ் சினிமாவில் டான்சராகும் ஆசையில் 2010-ல் சென்னை வந்தேன். டான்ஸ் மாஸ்டர் கல்யாணை சந்தித்து அவருடன் நடனம் ஆடினேன். அப்போது அவர் என்னை கண்ட இடத்தில் தொட்டார். உடனே ஆடுவதை நிறுத்தி விட்டேன். எனது போன் நம்பரை வாங்கி அன்று இரவே போன் செய்தார். அவருக்கு உதவியாளராக இருக்க வேண்டுமானால் அவரோடு படுக்க வேண்டும் என்றார். நான் அதிர்ந்துபோனேன். எனது கனவுகள் சிதைந்து போனதை உணர்ந்தேன். திறமையை மட்டும் நம்பி சினிமாவில் இருக்க முடியாது என்று உணர்ந்து இலங்கைக்கே திரும்பி விட்டேன்.
= சின்னமனூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞர்கள் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
= மகாராஷ்டிராவில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த பந்தலில் 13 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
= சென்னையில் முகளிவாக்கத்தில் 7-வயது சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில், மகிளா நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி எஸ் தஸ்வந்த் தாக்கல் செய்தமனுவைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது
= 2012-ம் ஆண்டு ஜோத்பூர் ஆஸ்ரமத்தில் தங்கி இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கி ஜோத்பூர் சிறப்பு எஸ்.சி.,எஸ்.டி. நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கி உள்ளது.
= பட்டுக்கோட்டை அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்து தாயாக்கிய பெயின்டருக்கு தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றம் 4 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அனைத்து சம்பவங்களையும் அவ்வளவு எளிதாக பட்டியல் இட்டுவிட முடியாது என்பதை நாம் நன்றாக அறிவோம். வெறும் எடுத்துக்காட்டிற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுக்கப்பட்ட மிகச்சில சம்பவங்களின் தொகுப்பையே மேலே காண்கிறோம்.
அதிகாரத்தில் உள்ளோரின் பொறுப்பின்மை:
எவ்வளவுதான் கொடுமைகள் உச்சகட்டத்தை அடைந்தாலும் ‘மறப்பது மக்களின் இயல்பு’ என்பதை நாட்டின் ஆட்சியாளர்கள் உணர்ந்தே உள்ளார்கள். அதனால் அவர்கள் இந்த வன்கொடுமையை தடுக்க  ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. அவ்வப்போது கண்துடைப்பிற்காக மட்டும் எதையாவது செய்து தங்களின் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள். இவையெல்லாம் நாளை மறுமையில் விசாரிக்கப்பட உள்ளன என்பதையும் அதற்கான தண்டனைகளை அனுபவிக்க உள்ளார்கள் என்பதையும் உணராமல் இருக்கிறார்கள்.
= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். .... உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்." (நூல்: புகாரி 7138)
குற்றங்களின் வீரியமான வளர்ச்சி:
இந்த தொடரும் குற்றங்களின் பெருக்கத்தினால் அவ்வப்போது நாடு கொந்தளிக்கிறது. போராட்டங்களும் சமூக வலைதளங்களில் தொடர்புடையோரைத் தூற்றலும் வீரியமாக நடக்கின்றன. ஆனால் மக்கள் கவனத்தை திசைதிருப்ப ஆள்வோர் தந்திரமான அணுகுமுறைகளைக் கையாள்கிறார்கள். புதுப்புது பரபரப்பான விவகாரங்கள் சமூக வலைத்தளங்கள் மூலமும் ஊடகங்கள் மூலமும் கிளப்பிவிட்டு அவற்றைப் பரப்பி இப்போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்து விடுகிறார்கள். மக்களும் அடங்கிப் போய்விடுகிறார்கள். இதுதான் இன்றைய நடைமுறை.
ஆனால் பாலியல் வல்லுறவு என்ற வன்கொடுமை சற்றும் அடங்காமல் மிகமிக வீரியமாக வளர்ந்தே வருகிறது என்பதை புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
= தாம்ஸன் ராய்டர்ஸ் பவுண்டேஷன்' எனும் அமைப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து 550 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. பாலியல் பலாத்காரம், கொத்தடிமையாக நடத்துதல், வல்லுறவு, கட்டாயத்திருமணம் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி நடத்திய அதன் ஆய்வில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது என்று அந்த வல்லுநர்கள் கண்டறிந்துள்ளார்கள்.. கடந்த 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட இதே ஆய்வில் பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் 4-வது இடத்தில் இருந்த இந்தியா, இன்று மிகமோசமாக முதலிடத்தில் இருக்கிறது. (தி ஹிந்து நாளிதழ் :  26 -௦6- 2018)
= தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகத்தின் அறிக்கைப்படி 2012  NCRB  நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 68 பெண்கள் கற்பழிக்கப்படும் நிலை இருந்தது.  2016 வருட அறிக்கைப்படி நாளொன்றுக்கு  106 பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள். கடந்த சில வருடங்களாக NCRB அறிக்கைகளை அரசாங்கம்  வெளியிடாத நிலையே தொடர்கிறது.
= இந்த எண்ணிக்கையில் சுமார் 94% க்கும் அதிகமான கற்பழிப்புகள் பாதிக்கப்பட்டோரின் உறவினர்களாலேயே நிகழ்த்தப்பட்டுள்ளன என்பது மிகவும் வேதனைக்குரிய வெட்கப்பட வேண்டிய தகவலாகும்.
உள்ளுக்குள்ளேயே புழுங்கித் தவிக்கும் பேதைகள்:
= மேலே கூறப்படும் புள்ளிவிவரம் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட தகவல்களின் அடிப்படையிலானது. பெண்களின் மானம் தொடர்புடையவை என்பதாலும்  குற்றமிழைத்தவர்களின் அடக்குமுறைக்கு பயந்தும் பெரும்பாலான குற்றங்கள் வெளி உலகத்திற்குத் தெரியாமல் மறைக்கப்பட்டு விடுகின்றன.. மேலும் காவல்துறையினர் கெடுபிடியும் அங்கு உண்டாகும் அலைச்சலும் காரணமாக அக்குற்றங்கள் அங்கு பதிய பாதிக்கப்பட்டவர்கள் முயற்சிப்பதில்லை. 
National Family Health Survey (NFHS)  என்ற அமைப்பு நடத்திய கணிப்பின்படி வெறும் 15 % சம்பவங்கள் மட்டுமே காவல்துறைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அப்படியானால் 85 % குற்றங்கள் வெளிச்சத்திற்கு வராமலே மூடி மறைக்கப்பட்டு வருகின்றன என்பதே உண்மை! அதாவது நாளொன்றுக்கு 106 பேர் கற்பழிக்கப்படுகிறார்கள் என்று அறிக்கை கூறினால் உண்மையில் நாளொன்றுக்கு  600 கற்பழிப்புக்கு ஆளாகிறார்கள் என்று அர்த்தம். 
இவற்றுக்கு பலியானவர்கள் கற்பழிக்கப்பட்ட பின்னும் அவற்றின் விளைவுகளை வெளியுலகிற்கு காட்டிக் கொள்ளாமலே அனுபவித்து வருகிறார்கள். அவற்றைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலைக்கு வரும்போது வாழ்க்கையே வெறுத்த நிலையில் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். அவையும் காவல்துறை கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதில்லை, மேற்கூறப்பட்ட அதே காரணங்களுக்காக!. இயற்கை மரணமாகவே ஊருக்கு மரணமாகவே அவை உறவினர்களால் ஊருக்கு அறிவிக்கப்படுகின்றன. என்ன ஒரு கொடுமை? 
தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகத்தின் சமீபத்திய அறிக்கைப்படி இன்று நாளொன்றுக்கு 371 நம் நாட்டில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதாவது நம்நாட்டில் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலைகள் ஒவ்வொரு நாளும் நிகழ்கின்றன என்று அர்த்தம்!
இறைவனின் நியாயத் தீர்ப்பு
யார் எவற்றை மறைத்தாலும் இறைவனிடம் இருந்து அவை மறைவதில்லை. அவை அனைத்தும் இறைவனிடம் பதிவாகின்றன. அவற்றிற்கு மறுமையில் மிகப் பக்குவமான முறையில் விசாரணையும் நீதி வழங்கலும் நடைபெற உள்ளன. இன்று cctv கேமராக்கள் முன்னால் யாரும் குற்றம் செய்ய முற்படுவதில்லை என்றறிவோம். ஆனால் நம் கண்களே நம்மைக் காட்டிக்கொடுக்கும் cctv ஆக மாறினால்...? ஆம், உண்மையும் அதுதானே!
= தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?  அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா? மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (திருக்குர்ஆன் 90:7. 9)
= அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.அன்றியும், எவர் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவர் கண்டு கொள்வார். (திருக்குர்ஆன் 99:6- 8
================ 

பாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி!



ஞாயிறு, 17 மார்ச், 2019

படைத்தவனைத் தவிர வேறெதுவும் கடவுளாகுமா?



படைத்தவனின் வல்லமை உணர்வோம்:
நம்மையும் இம்மாபெரும் பிரபஞ்சத்தையும் படைத்த இறைவனின் வல்லமையை உணர எண்ணற்ற சான்றுகள் நமக்குள்ளும் வெளியேயும் பரவிக்கிடக்கின்றன. ஒரு உதாரணத்திற்கு ஏதேனும் ஒரு விதையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அடங்கியுள்ள நுட்பங்களும் தகவல்களும் மென்பொருளும் எல்லாம் அந்த விதை மண்ணோடும் நீரோடும் சேரும்போது நிகழ்த்தும் அற்புதங்களை அறிவீர்கள். அவை செடிகொடிகளாக மரங்களாக பழங்களாக பரிணமித்து நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அதே போல ஒரு இந்திரியத் துளி முழு மனிதனாக பரிணமிப்பதையும் மீண்டும் இனப்பெருக்கம் செய்வதையும் காண்கிறோம்.
அவ்வாறே இம்மாபெரும் பிரபஞ்சம் ஒரு புள்ளியில் ஒடுங்கி நின்றதையும் அதற்கு இடப்பட்ட கட்டளைக்குப் பின் ஒரு பெருவெடிப்பு (Big bang) நிகழ்ந்து இப்பேரண்டமாக உருவெடுத்து தொடர்ந்து அதிவேக கதியில் விரிவடைந்து வருவதையும் இன்று அறிவியல் உறுதிப் படுத்திச் சொல்கிறது. இவை அனைத்தும் அதிபக்குவமான முறையில் உருவாக்கி பரிபாலித்து வரும் அந்த தன்னிகரற்ற சக்தியையே தமிழில் கடவுள் அல்லது இறைவன் என்றும் அரபு மொழியில் அல்லாஹ் என்றும் சொல்கிறோம்.
அற்பமானவன் அல்ல இறைவன்:
அந்த தன்னிகரற்ற இறைவன் இப்பேரண்டத்தில் அற்பமான ஒரு துகள் போன்ற பூமியின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் மற்றொரு துகளாக இருக்க வாய்ப்பில்லை என்பது பகுத்தறிவு நமக்குச் சொல்லும் தகவலாகும். மேலும் அந்த சர்வவல்லமை கொண்ட இறைவனுக்கு எதையேனும் அற்பப் பொருட்களை ஒப்பிட்டு அவற்றைக் கடவுள் என்று சொல்வதும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல் என்பதையும் அறிகிறோம்.
இறைவன் அல்லாதவற்றை வழிபடும் விபரீதம்:
இன்று பெரும்பாலான மக்கள் கடவுள் அல்லாதவற்றை கடவுளாக பாவித்து வணங்கும் செயலில் மூழ்கி உள்ளதை நாம் அறிவோம். அவ்வாறு இறைவனைச் சிறுமைப்படுத்தி சித்தரிப்பதால் மனித மனங்களில் உண்மை இறைவனைப் பற்றிய மதிப்பும் மரியாதையும் அகன்று போகிறது. அதனால் இறையச்சம் அகன்று போய் பாவங்கள் அதிகரிக்கின்றன. இறைவனை பல்வேறு விதமாக சித்தரிக்கும்போது அவற்றை வணங்குவோர் பல்வேறு குழுக்களாகி அவர்களுக்குள் ஏற்ற தாழ்வு கற்பித்தலும் தீண்டாமையும் எல்லாம் உடலெடுப்பதை நாம் அறிவோம். 
இறைவனின் சிந்திக்கத் தூண்டும் கேள்விகள்
இன்று மக்கள் வழிபட எடுத்துக் கொண்டுள்ள கடவுளர்களின் இயலாமையை உண்மை இறைவனின் வல்லமையோடு ஒப்பிட்டு நோக்க தனது வேதம் மூலம் அழைக்கிறான் அவன். இன்று நீங்கள்  உயிர்வாழ அனைத்து வசதிகளையும் அருட்கொடைக்கு மேல் அருட்கொடைகளாக வழங்கியவனை விட்டு விட்டு அவன் அல்லாதவற்றைக் கடவுளாக பாவித்து வணங்குவது முறையா என்று கேட்கிறான்:
  1. நீங்கள் வணங்குபவை மழையும் விளைச்சலும் தருமா?
= அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) இறைவன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 27:60) 
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)
  1. பூமியும் ஆறுகளும் கடல்களும் உண்டாக்கினவா?
= இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) இறைவன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். (திருக்குர்ஆன் 27:61) 
  1. பிரார்த்தனைக்கு பதில் கூறுமா?
= கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) இறைவன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும். (திருக்குர்ஆன் 27:62) 
  1. வழிகாட்டும் ஆற்றலுண்டா அவற்றுக்கு?
= கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய ரஹ்மத்என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) இறைவன் இருக்கின்றானா? - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன். (திருக்குர்ஆன் 27:63) 
  1. படைப்பாற்றல் உண்டா அவற்றுக்கு?
= முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) இறைவன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக: நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள். (திருக்குர்ஆன் 27:64) 
  1. மறைவானவற்றை அறியுமா?
=  (இன்னும்) நீர் கூறுவீராக: அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள். (திருக்குர்ஆன் 27:65) 
எனவே தங்களுக்குத் தாங்களே எந்த உதவியும் செய்துகொள்ள இயலாத கற்பனைக் கடவுள்களை விட்டுவிட்டு உண்மை இறைவன்பால் மீண்டு வாழ்வில் வெற்றி அடைய முயலுவோம்.
-------------
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html

செவ்வாய், 12 மார்ச், 2019

பெண்களே உஷார் - உங்கள் பாதுகாப்புக் கவசம்

உங்கள் ஆடைகளில் அமைந்துள்ள ஜன்னல்கள் அவை சிறிதாயினும் சரி பெரிதாயினும் சரி அவை உங்கள் உடல் அழகை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாகப் படைக்கின்றன. ஆண்களின் கழுகுக் கண்களை அந்த ஜன்னல்கள் கவரும்போது அவர்களில் சிலர் அதை ஒரு விருந்துக்கான அழைப்பாக எடுத்துக் கொள்கின்றனர். இனிப்புக் கடைகளில் வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக அவை ஷோ கேஸ்களில் கவர்ச்சிகரமான வெளிச்சம் போட்டு வைக்கப் படுவதுபோல் உங்கள் அங்க அழகு அவர்களை ஈர்ப்பதற்காகப் பிரதர்சனம் செய்யப்படுகிறது என்பதாக அவர்கள் உணர்கிறார்கள். இந்த விருந்து அழைப்பு விபரீதமாக மாறுவதை நாம் அன்றாடம் கண்டு வருகிறோம். தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் (National Crime Record bureau) கணக்குப்படி நாளொன்றுக்கு 106 பெண்கள் இந்தியாவில் கற்பழிக்கப் படுகிறார்கள். இது பதிவான கணக்குப்படி... பதிவுக்கு வராதவை எத்தனையோ?

புதன், 13 பிப்ரவரி, 2019

சொர்க்கம் செல்ல எளிய வழிகள்


Related image நீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியில் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பாறுவதற்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த மரத்தடியில் இளைப்பாறுதல் எவ்வளவு இன்பகரமானதாக இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்ய முடியும். ஆனால் எவ்வளவுதான் இன்பமானதாக இருந்தாலும் அதைத் துறந்து விட்டு பயணத்தைத் தொடர வேண்டியவனே அப்பயணி. ஆம், அந்த மரத்தடி நிழல் போன்றதே இந்தத் தற்காலிக உலகமும்!
   இல்லாமையில் இருந்தும் பிறகு இந்திரியத் துளியில் இருந்தும் உருவாகி இன்று இப்பூவுலகில் மனிதர்களாக நடமாடிக்கொண்டிருக்கும் நாம் இதையும் கடந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளோம் என்பதை  நம்மில் பலரும் எளிதாக மறந்து விடுகிறோம். இவ்வுலகத்தில் நாம் எவ்வளவுதான் சொத்துக்களையும் சுகங்களையும் புகழையும் ஈட்டினாலும் உறவுகளை வளர்த்துக் கொண்டாலும் இமாலயப் பதவிகளை எட்டினாலும் அனைத்தையுமே ஒரு நொடியில் இழக்க வேண்டியவர்கள்தான் நாம் அனைவருமே! வெறுங்கையுடன் வந்த நாம் வெறுங்கையோடுதான் திரும்பிச் செல்ல உள்ளோம். ஆனால் நம்மோடு தொடர்ந்து வரக்கூடியவை நமது செயல்களின் பதிவு மட்டுமே. நம்மைப் படைத்த இறைவன் நமக்களித்து வரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி கூறியவர்களாக அவன் நமக்கு ஏவிய கட்டளைகளுக்கேற்ப செய்யும் செயல்கள் மட்டுமே நமக்கு மறுமையில் பயன் தரும். அவை நமக்கு நிரந்தர இன்பங்களால் நிறைந்த சொர்க்கத்தைப் பரிசாகப் பெற்றுத்தரும்.
= எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்காரியங்கள் செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம் அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள் (இவ்வாறாக நற்)செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது. (திருக்குர்ஆன் 29:58)
= பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா? (திருக்குர்ஆன் 47:15)
ஆம், மறுமை வாழ்வில் நமது இருப்பிடம் சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோதான் அமைய உள்ளது. அந்த இரண்டுக்கும் இடைப்பட்ட எதுவும் அங்கு இல்லை. உதாரணமாக நீங்கள் பணி ஒய்வு பெற்றபின் உங்கள்  கம்பெனி நிர்வாகம் ஒரு வீட்டு மனை வழங்க உள்ளது என்று அறிவித்தால் எவ்வளவு தீவிரமாக உழைப்பீர்கள்? ஒரு தற்காலிக சுகத்தை அடைவதற்கே அவ்வாறு உழைப்போம் என்றால் அழியாத இன்பங்களை அடைவதற்காக நாம் சிறிதேனும் உழைக்க வேண்டாமா?
சொர்க்கம் செல்ல எளிய வழிகள்:
மறுமையில் உங்கள் அழியாத நிரந்தரமான இருப்பிடம் திகட்டாத சொர்க்கச் சோலைகளின் நடுவே அமைய வேண்டுமானால் நீங்கள் அவ்வளவு கடினமாக ஒன்றும் உழைக்க வேண்டியதில்லை! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இறைவன் தனது இறுதி வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் காற்றுத்தரும்  மிக எளிமையான ஒரு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது மட்டுமே!.
சொர்க்கம் செல்வதற்கான முதல்படி தூய இறைநம்பிக்கை. அதாவது படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன், அவனைத்தவிர யாரையும் நான் இனி வணங்கமாட்டேன்  என்றும் அவன் அனுப்பிய தூதரை – அதாவது முஹம்மது நபி (ஸல்) – அவர்களை  எனது வாழ்க்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டேன் என்ற ஒரு உறுதிமொழியை மனதார ஏற்று வாயால் மொழியவேண்டும்.
அஷ்ஹது அன் லா இலாஹ இல்லால்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு (பொருள்: வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமே இல்லை என்றும் முஹம்மது நபி அவர்கள் இறைவனின் அடிமையும் தூதரும் ஆவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்) – இதுதான் அந்த உறுதி மொழி. இந்த சத்தியப் பிரமாணத்தை மொழிய எந்த ஒரு வழிபாட்டுத்தலத்துக்கோ அல்லது ஒரு மதகுருவிடமோ செல்லவேண்டியதில்லை. நீங்களாகவே தனிமையில் படைத்த இறைவனை முன்னிறுத்திக் கொண்டு கூறினால் போதுமானது. அதை ஆத்மார்த்தமாக மொழிந்த பின் அதில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும்.
= நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான்¢ இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும். (திருக்குர்ஆன் 10:9)
இந்த இறைநம்பிக்கை கொண்டபின் இறைவன் கூறும் ஏவல் விலக்கல்களைப் பேணி அவனது பொருத்ததிற்கேற்ப நாம் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் வழிபாடாகவே கருதப்படும்.
திசைமாறாது இருக்க கடமைகள்
இறைநம்பிக்கை கொண்டபின் அதன் செயல்வடிவம்தான் அடுத்த கடமைகள். அவற்றில் முக்கியமானவை ஐவேளைத் தொழுகையும் ஜகாத் எனப்படும் கடமையான தான தர்மமும். நாம் ஏற்றுக் கொண்ட கொள்கையில் நிலைத்திருக்க வேண்டுமானால் ஷைத்தான் என்ற மறைமுமான சக்தி நம்மில் ஊசலாட்டங்களை உண்டாகி நம்மை திசைதிருப்பி விடக்கூடாது. நம்மில் சதா இறைவனைப் பற்றிய அச்சமும் அன்பும் தொடர்ந்து இருக்கவேண்டும்.. அதற்காக இறைவன் வகுத்தளிக்கும் திட்டமே ஐவேளைத் தொழுகை என்பது.
பொருளாசையும் நம்மை திசை திருப்பி விடக்கூடாது. செல்வம் என்பது உண்மையில் நமதல்ல. அதன் உரிமையாளன் இறைவன் மட்டுமே. அவன் நம்மைப் பரீட்சிப்பதற்காக தற்காலிகமாக நம் பொறுப்பில் விட்டு வைப்பதே செல்வம் என்பது. அதை நாம் நமது தேவைகளுக்காக பயன்படுத்தும் அதேவேளையில் நம்மைச் சுற்றி வாழும் ஏழை எளியவர்க்கும் அதில்  பங்குண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. அந்தப் பங்குதான் ஜகாத் என்பது.
நபிகளாரின் வாழ்வில்...
நபிகள் நாயகம் தனது சத்தியப் பிரசாரத்தை மக்களிடம் செய்து கொண்டிருந்தபோது மக்கள் அவரிடம் ஆர்வத்தோடு வந்து சொர்க்கம் செல்லும் வழிகள் பற்றிக் கேட்டறிந்து சென்றனர்.
 = ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, "செயல்படுத்தினால் என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும் வைக்கக் கூடிய ஒரு நற்செயலை எனக்குக் காட்டித் தாருங்கள்" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இறைவனை நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; (கடமையான) ஜகாத்தைச் செலுத்த வேண்டும்; உங்கள் உறவினரைப் பேணி வாழ வேண்டும்" என்று கூறினார்கள்.

அவர் திரும்பிச் சென்றதும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், "இவருக்குக் கட்டளையிடப் பட்டவற்றைக் கடைப்பிடித்தால் நிச்சயம் சொர்க்கம் சென்று விடுவார்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி). (முஸ்லிம்)
= கிராமவாசி ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, " இறைத்தூதரே! சொர்க்கத்தில் நுழைவதற்கான ஒரு நற்செயலை எனக்குக் காட்டித் தாருங்கள். அதைச் செயல் படுத்தி நான் சொர்க்கம் செல்ல வேண்டும்" என்று வேண்டினார். நபி(ஸல்) அவர்கள் "இறைவனையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; கடமையாக்கப்பட்ட ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்" என்று கூறினார்கள்.
அதற்கு அந்த மனிதர், "என் உயிரைக் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! ஒருபோதும் இதைவிட அதிகமாக எதையும் நான் செய்ய மாட்டேன்; இதிலிருந்து எதையும் நான் குறைக்க மாட்டேன்" என்று கூறினார்.
அவர் சென்றதும் நபி(ஸல்) அவர்கள், "சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்த்து மகிழ விரும்புபவர் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி). (முஸ்லிம்)
----------------- 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 

அல்லாஹ் என்றால் யார்?

திங்கள், 11 பிப்ரவரி, 2019

இல்லாமையில் இருந்து உண்டாக்குபவனே இறைவன



ஏதேனும் ஒரு இயங்கும் பொருளை – உதாரணமாக கடிகாரம், ஸ்கூட்டர், கால்குலேட்டர் – காணும்போது நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது? இவையெல்லாம் திட்டமிடுதலும் வடிவமைத்தலும்  உருவாக்கியவனும்  இல்லாமல் உருவாக முடியாது என்றும் இவை இயங்க தொடர்ச்சியான மின்சாரம் போன்ற இயங்கு சக்தி தேவை என்பதையும் உறுதியாகச் சொல்லும். ஏற்கெனவே கிடைக்கக் கூடிய பொருட்களை சிதைத்து அல்லது உருமாற்றி அவற்றை ஒன்று சேர்த்து முறைப்படிப் பொருத்தி உருவாக்கப் படுபவையே மேற்கண்ட பொருட்கள். இந்த தயாரிப்புக்களுக்குப் பின்னே என்னென்ன அறிவு சார்ந்த நடவடிக்கைகள் உள்ளன என்பதை நீங்கள் உணர்ந்தால் ஒரு அறிவார்ந்த உருவாக்குபவன் அல்லது குழு இல்லாமல் இவை உருவாக முடியாது என்றே உறுதியாகச் சொல்வீர்கள்.
ஆனால் அறவே இல்லாமையில் இருந்து அதிபக்குவம் வாய்ந்த பொருட்கள் உருவாகி இயங்கி வரும் அற்புதத்தை மட்டும் தானாக உருவானவை என்று அறிவுள்ள எவராலும் சொல்ல முடியுமா? உருவாகுவது மட்டுமல்ல, தானியங்கியாக அவை தாங்களாகவே இனப்பெருக்கமும் செய்வதைக் கண்டால் இவற்றின் பின்னுள்ள நுண்ணறிவாளனை சர்வ வல்லமை கொண்டவனை எவ்வாறு மறுக்க இயலும்?
= இறைவன்  எவ்வாறு முதன் முறையாகப் படைக்கின்றான் என்பதையும், பிறகு எவ்வாறு அதை மீண்டும் படைக்கின்றான் என்பதையும் அவர்கள் என்றுமே கவனித்ததில்லையா? (மீண்டும் படைப்பது எனும்) இந்தப் பணி திண்ணமாக, இறைவனுக்கு எளிதானதாகும். (திருக்குர்ஆன் 29:19) 
 = இவர்களிடம் கூறும்: பூமியில் சுற்றித் திரிந்து பாருங்கள்; எவ்வாறு அவன் முதன் முறையாகப் படைத்துள்ளான் என்று! பின்னர், இறைவன் இன்னொரு தடவையும் வாழ்வை நல்குவான். திண்ணமாக, இறைவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன். (திருக்குர்ஆன் 29:20)
உடல் என்ற பெரும் பாடம்
நம் உடலையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள்... அவற்றுக்குள் இருக்கும் உறுப்புக்களும் அவற்றின் பல்வேறு விதமான கட்டமைப்புகளும் அவற்றின் ஒழுங்குப்படுத்தப்பட்ட இயக்கங்களும் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் முதன்முறைப் படைக்கும்போதே அவை தானியங்கியாகவே தங்கள் சந்ததிகளையும் வழிவழியாக உருவாக்கிக் கொள்ளும் அற்புதத்தை என்னவென்று சொல்வது? மனிதர்களும் விலங்குகளும் தாவரங்களும் இன்னபிற ஜீவராசிகளும் இன்னும் நம் கண்களுக்குப் புலப்படுவதும் புலப்படாததுமான எண்ணிலாப் படைப்பினங்களும் தங்களைத் தாங்களே இனவிருத்தி செய்து கொள்ளுதல் என்பது தற்செயலான ஒன்றா? எந்த ஒரு வடிவமைத்தலும் திட்டமிடுதலும் மென்பொருளும் இல்லாமல் இவை நடக்க முடியுமா?
= நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களாஅதை நீங்கள் படைக்கிறீர்களாஅல்லது நாம் படைக்கின்றோமா?(திருக்குர்ஆன் 56:57-59)
= . நீங்கள் எப்படி இறைவனை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்;பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக் கொண்டுவரப் படுவீர்கள். (திருக்குர்ஆன் 2:28)

விதை எனும் அற்புதம்
= நீங்கள் விதைக்கின்ற இந்த விதையைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? இதன் மூலம் பயிர்களை நீங்கள் விளைவிக்கின்றீர்களா? அல்லது நாம் விளைவிக்கின்றோமா? நாம் நாடினால் இவற்றைப் பதர்களாய் ஆக்கிவிட்டிருப்போம். அப்போது நீங்கள் பலவாறு புலம்பிக்கொண்டிருப்பீர்கள் (திருக்குர்ஆன் 56:63) 
ஒரு விதையையோ கடுகையோ எள்ளையோ எடுத்து நோட்டமிடுங்கள். அதற்குள் அடங்கியுள்ள மென்பொருளை அதாவது அதில் அடங்கியுள்ள மூலப்பொருட்களின் இயல்புகளை செயல்பாடுகளை நடத்தையை அல்லது அதிலிருந்து முளைக்கப் போகும் தாவரத்தின் இலை, தண்டு, காம்பு போன்றவற்றின் இயல்புகள், நிறங்கள், வடிவங்கள், போன்ற விவரங்கள் அல்லது எவை எவை என்னென்ன  விதத்தில் அளவையில் விகிதத்தில் இருக்கவேண்டும் என்னும் விவரங்களை இன்னும் நாம் நம்மால் அறிய இயலாத ஏராளமான விவரங்களை கட்டளைகளை  -  முன்கூட்டியே எழுதியதும் இயக்குவதும் கட்டுப்படுத்துவதும் யார்?

 (நபியே!) உயர்வான உம் இறைவனுடைய திருப் பெயரைத் துதிப்பீராக! அவன்  எத்தகையவன் எனில்,  அவன்தான் படைத்தான்; பொருத்தமாகவும் பக்குவமாகவும் அமைத்தான்;  மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கும் இயங்குவதற்கும்) வழிகாட்டினான். (திருக்குர்ஆன் 87:1-3)

பிரபஞ்சத்தின் ஆரம்ப விதை
இந்தப் பிரபஞ்சம் அனைத்தும் மிகமிகச்சிறியதொரு புள்ளியாக ஒரு கருவில் ஒடுங்கியிருந்தது. அந்தக் கரு ஒரு குறித்த கணத்தில் திடீரெனப் பிரமாண்டமாக வெடித்துச் சிதறியது.  கோடானகோடி அணுகுண்டுகளை ஒன்றாய்ச் சேர்த்து வெடித்தது போல இருந்த அந்தப் பெருவெடிப்பைத்தான் 'பிக்பாங்க்' (Bigbang) என்று குறிப்பிடுகிறார்கள். வெடித்த அடுத்த நொடியிலேயே அது பேரண்டமாக விரிவடைந்தது. மிகச் சிறியதொரு புள்ளி ஒருநொடிக்கும் குறைந்த நேரத்துக்குள் பேரண்டமாக விரிவடைந்தது. அந்த விரிவாக்கம் தொடர்ந்து முடுக்கப்பட்ட வேகத்தோடு நடைபெற்று வருகிறது என்பதையும் அறிவியல் நிரூபித்து நிற்கிறது.
பெருவெடிப்பு பற்றிய குறிப்பை இறைவேதம் திருக்குர்ஆனில் காணலாம்:
= சத்தியமறுப்பாளர்கள் பார்க்கவில்லையா நிச்சயமாக வானங்களும்பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதை?... (திருக்குர்ஆன் 21:30) 
பிரபஞ்ச விரிவு பற்றி படைத்தவன் கூற்றை நாம் இங்கு நினைவு கூருவோம்:
= மேலும்நாம் வானத்தை (நம்) சக்தி கொண்டு அமைத்தோம்நிச்சயமாக நாம் விரிவாக்கும் ஆற்றலுடையவராவோம்.  (திருக்குர்ஆன் 51:47) 
ஒரு மரத்தின் விதையில் அது தொடர்பான அனைத்து பாகங்களின் இயல்பும் மென்பொருளும்  ஆற்றல்களும் உள்ளடக்கப் பட்டதன் காரணமாக மரமும் தொடர்ந்து பழங்களும் விதைகளும் உருவாகி அவற்றின் மூலம் இனப்பெருக்கமும் நடந்து கொண்டு வருகிறன என்பதை நாம் அறிகிறோம். இதே போல இந்தப் பிரபஞ்சத்தின் ஆரம்பக் கருவைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள். அதற்குள்ளும் இந்தப் பிரபஞ்சத்தில் இன்று காணும் அனைத்து கூறுகளின் – பெரியதும் நுண்ணியதுமான அனைத்தின் - இயல்புகளும் இயங்கு விதிகளும் மென்பொருளும் எல்லாம் எழுதப்பட்டு இருக்கவேண்டும். அக்கருவை இல்லாமையில் இருந்து தோன்றவைத்து அதிலிருந்து இன்று காணும் இப்பேரண்டத்தை உருவாக்கி பரிபாலித்து வரும் அந்த மாபெரும் சக்தியையே தமிழில் இறைவன் என்றும் அரபுமொழியில் அல்லாஹ் என்றும் அழைக்கிறோம்.
= படைப்புகளின் விதியை அல்லாஹ் வானங்க ளையும், பூமியையும் படைப்பதற்கு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
 அறிவிப்பு : அம்ரு இப்னு ஆஸ்(ரலி), முஸ்லிம், திர்மதி.
அற்பமானவனல்ல இறைவன்
அந்த தன்னிகரற்ற சக்தி என்பது நம்மைப்போல் பலவீனமான ஒருமனிதனைப் போலவோ அல்லது 
 நம்மைவிடத் தாழ்ந்த ஒரு ஜீவியாகவோ அல்லது ஒரு வெறும் உணர்வற்ற  ஒரு  ஜடப்பொருளாகவோ  இருக்க முடியாது  என்பதும் அதே பகுத்தறிவு  நமக்குச் சொல்லும் பாடமாகும்.
= சொல்வீராக: இறைவன் ஒருவனேஅவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை.அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
----------------
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html